Sunday, September 28, 2008

ஆலம்பரைக் கோட்டை

Alamparai Fort

கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை, பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் இப்பகுதி, இடைக்கழிநாடு எனப் பயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் முகமதியர்களால் ஆலம்பரையில் கோட்டை கட்டப்பட்டது.

Alamparai Fort

செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. நவாபுகளின் ஆட்சியில் ஆலம்பரை, துறைமுகப் பட்டினமாக இருந்துள்ளது.

Alamparai Fort

இக்கோட்டையின் கீழ்ப்புறம், படகுத் துறை ஒன்று, கப்பலுக்குப் பொருட்களை ஏற்ற, இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத் துறையின் நீளம் சுமார் 100 மீட்டர். அவற்றின் பகுதிகள் இப்போதும் காணப்படுகின்றன.

Alamparai Fort

ஆலம்பரை படகுத் துறையிலிருந்து சரிகைத் துணி வகைகள், உப்பு, நெய் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Alamparai Fort

ஆலம்பரையில் அமைந்துள்ள நாணயச் சாலையில் ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.

Alamparai Fort

இந்நாணயச் சாலையின் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன், கிழக்குக் கடற்கரை வழியாகக் காசி, இராமேஸ்வரத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்காகச் சிவன் கோயில், பெரிய குளம், சத்திரம் ஆகியவற்றைக் கட்டினார்.

Alamparai Fort

இந்தப் பெருவழி, இப்போது கோட்டைக்கு மேற்கில் 2 மைல் தொலைவில் செல்கிறது. இந்தப் பகுதியைத் தமிழ்நாடு தொல்லியல் துறை இப்போது பராமரித்து வருகிறது.

Alamparai Fort

கி.பி.1735இல் நவாப் தோஸ்த் அலிகான் இக்கோட்டையை ஆண்டார். கி.பி.1750இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சுத் தளபதி டியுப்ளக்சுக்கு, சுபேதார் முசாபர்ஜங் இந்தக் கோட்டையைப் பரிசளித்தார்.

Alamparai Fort

கி.பி.1760இல் பிரெஞ்சுப் படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப் படை, இக்கோட்டையைக் கைப்பற்றிச் சிறிதளவு சிதைத்துவிட்டது. சிதைவுகளின் மிச்ச சொச்சம், இன்றும் நம் முன் காட்சி அளிக்கின்றன.

Alamparai Fort

Alamparai Fort

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

9.9.2007 அன்று முகவை முனியாண்டியின் ஏற்பாட்டில் நண்பர்களுடன் இப்பகுதிக்குச் சென்ற போது நான் எடுத்த படங்களின் ஒரு பகுதி இவை.

Photobucket

Sunday, August 24, 2008

ஒட்டகச் சிவிங்கியின் காதல்

மைசூர் விலங்கியல் பூங்காவுக்கு 17.8.2008 அன்று சென்றிருந்தேன். அங்கு பலவித விலங்கினங்கள் வீற்றிருந்தன. ஆயினும் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது ஒட்டகச் சிவிங்கி. நீண்ட கழுத்துடன், பார்க்க மிகவும் சாதுவாக இருந்தது.



உள்ளே பல இடங்களுக்கும் சுற்றிவிட்டு வெளியே வருகையில் ஓர் அரிய காட்சியைக் கண்டேன். ஆம்! ஓர் ஆண் ஒட்டகச் சிவிங்கி, ஒரு பெண் ஒட்டகச் சிவிங்கியை ஒட்டி உரசி உடலுறவு கொள்ள முயன்றது. ஆனால், பெண் சிவிங்கி விலகி விலகிச் சென்றது. ஆணோ விடவில்லை. பெண் போகும் இடத்திற்கு எல்லாம் பின்னாலேயே சென்றது. அதன் மீது ஏறுவதற்கு முயன்றது.









நான் அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் உடனே கிளம்பிவிட்டேன். எனவே, ஆணின் முயற்சி வென்றதா என்று தெரியவில்லை. :) :(

Saturday, August 23, 2008

அழகிய புற்று

16.8.2008 அன்று பெங்களூர் சென்றிருந்தேன். அங்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு (HAL) எதிரே தற்செயலாக இந்தப் புற்றினைக் கண்டேன். பார்த்தவுடன் கண்ணைக் கவரும் விதத்தில் இதன் கட்டுமானம் அமைந்திருந்தது. எறும்பு, கறையான் போன்றவை கட்டிய புற்றுகளை முன்பு கண்டதுண்டு. ஆனால், இந்தப் புற்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழில்மிகு சீரமைப்புடன் விளங்குகிறது. இதைக் கட்டிய உயிரினம் எதுவாக இருக்கும்?





Saturday, March 01, 2008

கண்ணாடிப் பெட்டிக்குள் சுஜாதா

கணையாழியில் கடைசிப் பக்கம் எழுதிய சுஜாதாவின் கடைசித் தோற்றம் இது. 

27.2.2008 அன்று இரவு சுஜாதா மறைந்தார் என்ற செய்தி கிட்டியது. அடுத்த நாள் காலை அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் உடல் அங்கு இல்லை. அமெரிக்காவில் இருக்கும் மகன் வர வேண்டும் என்பதற்காக உடலை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதாகவும் 29.2.2008 அன்று காலையில் தான் உடலைக் கொண்டு வருவார்கள் என்றும் தெரிவித்தார்கள். இரா. முருகன், வைத்தீஸ்வரன், திருப்பூர் கிருஷ்ணன், தேசிகன்.... எனப் பலரும் அங்கு இருந்தார்கள். அடுத்த நாள் (29.2.2008) காலை மீண்டும் அங்குச் சென்றேன். முந்தைய நாளை விடக் கூட்டம் அதிகம் இருந்தது. காக்கித் தலைகள் நிறையத் தெரிந்தன. சுஜாதா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் நீங்காத் துயில் கொண்டிருந்தார். மவுன அஞ்சலி செலுத்தினேன். இலக்கிய, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அங்கு இருந்தார்கள். இனிப் பார்க்க முடியாத அவரைப் படத்திலாவது பிடித்து வைப்போம் என்ற எண்ணத்தில் சில படங்கள் எடுத்தேன். 

 கண்ணாடிப் பெட்டிக்குள் சுஜாதா  



சுஜாதா ரங்கராஜனின் மனைவி, உண்மையான சுஜாதா. 


சுஜாதாவின் மகன் ரங்கபிரசாத். அருகில் தேசிகன்.  


மலர் அஞ்சலி  






முடிந்தது

Saturday, January 05, 2008

ஜதி பல்லக்கில் பாரதி

மகாகவி பாரதி உயிரோடு இருந்தபோது அவருக்கு உரிய மரியாதை செலுத்தத் தமிழ்ச் சமூகம் தவறிவிட்டது. அந்தக் குறையை இப்போதாவது நிவர்த்தி செய்வோம் என்ற எண்ணத்துடன் ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளில் அவரது உருவச் சிலையை ஜதி பல்லக்கில் வைத்து, பாரதி பாடல்கள் பாடியபடி, ஊர்வலமாகத் தூக்கிச் சென்று பாரதி அன்பர்கள் விழாக் கொண்டாடி வருகின்றனர். வழக்கறிஞர் ரவி குழுவினர் நிருவகிக்கும் வானவில் பண்பாட்டு மையம், இந்த நிகழ்வை நடத்துகிறது. அதே போன்று 2007 டிசம்பர் 11 அன்றும் விழாக் கொண்டாடினர்.

இந்த ஜதி பல்லக்கினைத்தான் அவர்கள் தூக்கிச் சென்றனர்.



திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதைகள்...



இந்த விழாவில் கவிஞர் மயனுக்குப் பாரதி விருதினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கினார். (இடமிருந்து வலமாக) ஒய் எம் சி ஏ பட்டிமன்றத்தை நீண்ட காலமாக நடத்தி வரும் கெ.பக்தவத்சலம், வழக்கறிஞர் ரவி, முனைவர் வ.வே.சு., கவிஞர் மயன், கவிஞர் ஈரோடு தமிழன்பன்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பகுதியினர்.



படங்கள்: அண்ணாகண்ணன்