Monday, September 18, 2006

மின்னோவியத் திருமேனிகள்

செப்டம்பர் 16 அன்று சென்னை வீதிகளில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன். வழியெங்கும் மின்னோவியத் திருமேனிகள். விதவிதமான கடவுளர் உருவங்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேற்கு மாம்பலத்திலும் அசோக் நகரிலும் இவை மிக அதிகமாக இருந்தன.

பல மின்னோவியங்களின் கீழ் அவற்றுக்கு நிதியளித்தவரின் பெயரும் மின்னிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அரச மரம் ஒன்றுக்கு மின்சார ஆடை உடுத்தியிருந்தார்கள். இந்த மின்னோவியங்களை உருவாக்கிய கலைஞர்கள், பாராட்டுக்கு உரியவர்கள்.

ஆனால், பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள இவற்றுக்கு மின்சாரம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் எடுக்கப்பட்டுள்ளதா என்பது என் ஐயப்பாடு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Sunday, September 17, 2006

டெரகோட்டா படைவீட்டம்மன்

செப்.16 அன்று இரவு சைதை சுரங்கப் பாதை வழியே வந்தபோது இதைக் கண்டேன். பன்னீர்செல்வம் நகரில் சாலையோரத்தில் 3 முதல் 4 ஆள் உயரத்திற்கு டெரகோட்டாவில் படைவீட்டம்மன் (படவட்டம்மன்) அம்மன் சிலையைச் செய்து வைத்திருந்தார்கள்.



கயிலாய மலையில் அம்மன் சாய்ந்து படுத்திருக்க, அவருக்குப் பின்னிருந்து ஒரு பெண், தலையில் பாலூற்றி அபிஷேகம் செய்வது போல் செய்திருந்தார்கள். உண்மையிலேயே பாலோ, வெண்ணிறத் தண்ணீரோ அம்மன் தலையில் இடைவிடாமல் விழுந்துகொண்டிருந்தது.



அம்மன் காலடியில் முருகன் சிலை ஒன்று. அம்மனுக்கு இரு புறமும் பாவை விளக்குகள். பக்கவாட்டில் படமெடுத்த பாம்பு.



அம்மனுக்கு வெகு அருகில் அந்தச் சிலைக்கு நிதியளித்தவரின் / ஏற்பாடு செய்தவரின் பெயரும் படமும் ஒரு சிறிய பலகையில் பளிச்சென வைத்திருந்தார்கள். விசாரித்ததில் அவர், அந்த வட்டாரத்தில் முன்பு மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தவராம்.



அரசியல்வாதிகளின் திருப்பணிகள், உள்நோக்கம் கொண்டவை. நீண்ட காலமாகவே அப்படித்தான் நடந்து வந்துள்ளது. மக்களின் செல்வாக்கை மீண்டும் பெற, பக்தியைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். 'படவட்டம்மன் அருள்பெற்ற' என்ற அடைமொழியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அவர் நின்றாலும் நிற்கலாம்.

Thursday, September 14, 2006

தெருவில் சிதறிய அரிசி

இரு மாதங்களுக்கு முன் அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, இதைக் கண்டேன். தெருவின் நடுப்பகுதியில் ஒரு கோடு போல் அரிசி நீண்டிருந்தது. ஒருவர், அந்த அரிசியைத் திரட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு மிதிவண்டி. அந்த மிதிவண்டியின் பின்னால் ஒரு பெரிய பை.

என்ன நடந்திருக்கிறது என்று உடனே புரிந்துவிட்டது.

நியாய விலைக் கடையிலோ, மளிகைக் கடையிலோ 15, 20 கிலோ அரிசி வாங்கி அதைத் தன் மிதிவண்டியின் பின்புறத்தில் வைத்துக்கொண்டு இவர் வந்திருக்கிறார். அரிசிப் பையில் சிறு ஓட்டை இருந்திருக்கிறது. அதை இவர் கவனிக்கவில்லை. மிதிவண்டியை மிதித்துக்கொண்டு தெருவில் போயிருக்கிறார். அந்த ஓட்டையிலிருந்து அரிசி கீழே ஒரே சீராகக் கொட்டத் தொடங்கியிருக்கிறது. அதைத் தெருவில் யாரோ பார்த்து இவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் இவர், கொஞ்ச தூரம் வந்துவிட்டார்.

உடனே வண்டியை நிறுத்தி, ஓட்டையை அடைத்திருக்கிறார். இப்போது நின்று திரும்பிப் பார்த்தால் தெரு முழுக்க நடுவில் கோடு போட்டது போல் அரிசி. அதை அப்படியே விட்டுவிட்டு வர மனம் இடம் கொடுக்கவில்லை. பக்கத்தில் யாரிடமோ, விளக்குமாறு ஒன்று வாங்குகிறார். அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிக் குவிக்கிறார். அதைத் தான் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.





இரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில் எடுத்த படங்கள் என்பதால் மங்கலாகத் தெரிகிறது.

இதைப் படம் எடுக்கக் காரணம், ஏழைக்கு ஒவ்வொரு அரிசி மணியும் முக்கியம் என்பதை உணர்த்தத்தான்; சாப்பிடும்போது மிச்சம் மீதி வைத்துவிட்டு, எறிந்துவிட்டுச் செல்வோர், இதைப் பார்க்க வேண்டும். நாம் வீணடிக்கும் உணவு, வேறொருவரின் வயிற்றுக்குச் சொந்தமானது; பணத்தைக் கொடுத்து வாங்கியதாலேயே அதை வீணடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதை உணரவேண்டும்.

Tuesday, September 12, 2006

ஒரு பாலம் உருவாகிறது

சென்னையில் பாடிக்கும் வில்லிவாக்கத்திற்கும் இடையில் ஒரு ரெயில்வே கேட் உள்ளது. அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த நிலையில் அங்கு பாடி ரெயில் நிலையம் வேறு அமைந்துவிட்டது. அதிக ரெயில்கள் இயக்கப்படவில்லை என்றாலும் ரெயில்கள் இயக்கப்படும்போது நெரிசல், நெர்ர்ர்ர்ரிசல் ஆகிவிடும்.

இப்பகுதி மக்களின் குறை தீர்க்க, அங்கு ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் கீழ் வரும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை, இப்பணியை முடுக்கிவிட்டுள்ளது.

விரைவாக உருவாகி வரும் இந்தப் பாலத்தின் சில காட்சிகள் இங்கே >>>>>>











Monday, September 11, 2006

டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள்

Photobucket - Video and Image Hosting

மகாகவி பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு செப். 11 அன்று சென்னையில் பாரதி விழா நடைபெற்றது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஏற்பாடு செய்த இந்த விழாவில் ஓவியக் கண்காட்சி, கவிதா நிகழ்வு, பாரதி இசை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இராம. நாராயணன் தலைமையில் தமிழக நிதியமைச்சர் சிறப்புரை நிகழ்த்த,கனிமொழி, தமிழச்சி, வெண்ணிலா, இளம்பிறை, கவிதா ஆகியோர் கவிதை வாசித்தார்கள். சுதா ரகுநாதன், பாரதி பாடல்களைப் பாடிக் கலக்கினார்.

சென்னை பாரதிய வித்யா பவனின் சுவர்களில் ஆங்காங்கே ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அவற்றை என் செல்லில் பிடித்து எடுத்து வந்தேன்.

அவை இதோ>>>>

குயில் பாட்டு

Photobucket - Video and Image Hosting


கண்ணம்மா என் காதலி

Photobucket - Video and Image Hosting


விதியே விதியே

Photobucket - Video and Image Hosting


எங்கள் முத்துமாரி

Photobucket - Video and Image Hosting


பிழைத்த தென்னந்தோப்பு

Photobucket - Video and Image Hosting


பெண்மை

Photobucket - Video and Image Hosting

பெயர் நினைவில்லை

Photobucket - Video and Image Hosting

பெயர் நினைவில்லை

Photobucket - Video and Image Hosting


ஓவியர் மருது

Photobucket - Video and Image Hosting


அவரேதான்

Photobucket - Video and Image Hosting

Monday, September 04, 2006

பெங்களூரில் நான்

சுற்றிப் பார்க்கும் நோக்குடன் செப்டம்பர் 3,4 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருக்குச் சென்றேன். பெங்களூர் ரெயில் நிலையப் பெயர்ப் பலகையின் கீழ் நின்றுள்ள இந்தப் படமே நான் பெங்களூர் சென்று வந்ததற்குச் சான்று. :)



தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய்மொழியின் மீது கொண்ட காதலாலும் வேற்று மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகவும் இந்தி, ஆங்கில எழுத்துகளை அழிக்கிறார்கள் என்றில்லை. கன்னட மொழியின் மீது தீவிர அன்பு கொண்ட ஒருவர், இந்தி, ஆங்கில எழுத்துகளின் மீது தார் பூசியிருப்பதைப் பாருங்கள்.



பெங்களூரில் முதலில் கண்ணைக் கவர்ந்தது, அதன் போக்குவரத்துத் துறைதான். சென்னையை விடப் பெங்களூர், அதில் சிறப்பாக உள்ளது. பேருந்து நிறுத்தங்கள் பலவும் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. பெரிய, கவர்ச்சிகரமான நிழற்குடை, அதில் ஒளியில் மின்னும் வண்ணம் விளம்பரங்கள், அந்த விளம்பரங்களின் மூலம் வருவாய், பயணிகள் உட்காரச் சிறப்பான இருக்கைகள், பேருந்து வழித் தடங்களைக் காட்டும் வரைபடம், நவீன குப்பைத் தொட்டி.... என நிறுத்தங்கள், நின்று பார்க்கும் விதத்தில் இருந்தன.




நிறுத்தத்தின் தரைப் பகுதியில், நல்ல கற்களைப் பதித்திருந்தார்கள். பயணிகள் பிடித்துக்கொண்டு நிற்கக் கைப்பிடிகளும் இருந்தன. நிழற்குடையின் முகப்பில் அந்த நிறுத்தத்தின் பெயரைப் பெரிய எழுத்தில் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருந்தார்கள். அது, பல வகைகளில் உதவியாக இருந்தது.



பேருந்து வழித் தடங்களைக் காட்டும் வரைபடம்...



பேருந்து வழித் தடங்களைக் காட்டும் வரைபடம்... அண்மைக் காட்சி



அடுத்து முக்கியமானது, பேருந்துகளில் நடத்துநராகப் பெண்களை நியமித்துள்ளது. சென்னையில் பெண் ஒருவர், பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே ஒருவர்தான் இருக்கிறார். ஆனால், பெங்களூரில் பல பேருந்துகளில் பெண் நடத்துநர்களைக் கண்டேன். அது அங்கு சர்வ சாதாரணம் என அங்குள்ளவர்கள் கூறினார்கள். பல்லாண்டுகளாக அவர்கள் பணியில் இருப்பதாகத் தெரிந்தது. படத்தில் இருக்கும் இந்தப் பெண், 4 ஆண்டுகளாகப் பணியில் இருக்கிறாராம். அவர்கள், காக்கிச் சீருடையில் இருந்தார்கள் (கொசுறு: படத்தில் இருக்கும் பெண், காலில் ஷூ அணிந்து, அதற்கு மேல் கொலுசு அணிந்திருந்தார்).



அடுத்த முக்கிய சீர்திருத்தம், மாநகரப் பேருந்துகள் அனைத்திற்கும் கதவுகள் பொருத்தியிருப்பது. முதலில் சொல்லிச் சொல்லிப் பார்த்தும் படிக்கட்டுப் பயணத்தைப் பலரும் விடுவதாக இல்லை; எனவே இந்தக் கதவுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் கட்டுப்பாடு, பேருந்து ஓட்டுநரிடம் உள்ளது. பயணிகள் அதிகமாக ஏறினால் உடனே அவர், கதவை மூடி விடுகிறார். இதன் மூலம் படிக்கட்டிலிருந்து விழுந்து மரணம் என்ற செய்திகள் அங்கு இல்லை. ஓடும் பேருந்தில் ஏறுவதோ, இறங்குவதோகூட முடியாது.



இப்படிக் கதவுகள் பொருத்தியதால், பேருந்தினுள் காற்றோட்டம் வேண்டும் என்பதற்காகப் பேருந்தின் கூரைப் பகுதியில் சிறு திறப்பு வைத்துள்ளார்கள். புதிய பேருந்துகள் அனைத்திலும் இந்தக் கூரைத் திறப்பைக் காண முடிகிறது.



தானி(ஆட்டோ) ஓட்டுநர்கள், பெரும்பாலும் சரியான கட்டணத்தையே வாங்குகிறார்கள். மேலே போட்டுக் கொடுங்க என்று கேட்பதில்லை.

பெங்களூரின் நல்ல அம்சங்களைச் சென்னை பின்பற்றலாம்.

சென்னையோடு ஒப்பிடும் போது, பெங்களூரின் பல சாலைகள், சற்றே சிறியனவாகவே உள்ளன. இதனால்தான் பெங்களூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளை விரிவுபடுத்தக் கூடும் என்ற தொலைநோக்கு இல்லாமல் சாலையை ஒட்டி, பெரிய கட்டடங்களை எழுப்பியுள்ளார்கள். இப்போது இவற்றை அகற்றினால்தான் சாலைகளை விரிவுபடுத்த முடியும் என்ற நிலை. இதற்கிடையே, நான் பார்த்த பல சாலையோரங்களில் இரண்டு அடுக்கு வரை கொண்ட சிறிய கட்டடங்களை இடித்துக்கொண்டிருந்தார்கள், இன்னும் பிரமாண்ட கட்டடம் எழுப்புவதற்காக.

நான் காலை 7 மணிக்கு ஒரு பேருந்தில் ஏறினேன். பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் நான் இறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி, போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டேன். இந்த நேரத்தில் போனால், அரை மணி நேரத்தில் போய்விடலாம்; பகலில் போவதென்றால் ஒன்றரை மணி நேரமாகும் என்றார், வெகு இயல்பாக.

Friday, September 01, 2006

வெயிலில் குழந்தைத் தொழிலாளி

சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் சாலையைக் கடக்க ஒரு சுரங்கப் பாதை உள்ளது. புறநகர் ரெயிலிலிருந்து இறங்குவோர் பெரும்பாலோர் இதனைப் பயன்படுத்துவார்கள். எனவே ரெயில் நின்ற சில நிமிடங்களில் இங்கு கூட்டம் நெருக்கும்.

இந்தக் கூட்டத்தின் கவனத்தைத் திருப்பி, தங்கள் பொருள்களை வாங்க வைக்கப் பலரும் முயலுவார்கள். கைக்குட்டை, காலுறைகள், சீப்பு, ஊக்கு எனச் சில்லறைப் பொருள்கள் பலவும் அங்கு கிடைக்கும். சுரங்கத்திற்குக் கொஞ்சம் முன்னால் இந்தக் கடை இருந்தது.குழந்தைகளுக்கான கொசு வலை, அது.



இதில் என்ன வேடிக்கை என்றால், அவனுக்கு 10 - 12 வயதுக்குள்ளாகத்தான் இருக்கும். அவனே குழந்தைத்தனம் மிகுந்தவனாய் இருக்கையில் குழந்தைக்கான பொருளை அவனே விற்பது ஒரு நகை முரண்தான்.




கடும் வெயிலில் உட்கார்ந்திருந்த அவன், தன் இரு கைகளாலும் கண்ணை மட்டும் லேசாக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். வியாபாரம் மிகவும் மந்தமாய் இருந்தது. அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த அவனின் அண்ணன், சமயோசிதமாக ஒரு கொசு வலைக் கூடையைத் தன் தலைக்கு மேல் குடை போல் காட்டி அமர்ந்திருந்தான்.

மேலே நீங்கள் பார்த்த படத்தில், படத்தை எடுக்கும்போது அதில் என் நிழலும் விழுந்துள்ளது.

இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள், பள்ளிக்குச் சென்று படிக்கும் அந்த நாள், எந்த நாள்?