Sunday, September 17, 2006

டெரகோட்டா படைவீட்டம்மன்

செப்.16 அன்று இரவு சைதை சுரங்கப் பாதை வழியே வந்தபோது இதைக் கண்டேன். பன்னீர்செல்வம் நகரில் சாலையோரத்தில் 3 முதல் 4 ஆள் உயரத்திற்கு டெரகோட்டாவில் படைவீட்டம்மன் (படவட்டம்மன்) அம்மன் சிலையைச் செய்து வைத்திருந்தார்கள்.



கயிலாய மலையில் அம்மன் சாய்ந்து படுத்திருக்க, அவருக்குப் பின்னிருந்து ஒரு பெண், தலையில் பாலூற்றி அபிஷேகம் செய்வது போல் செய்திருந்தார்கள். உண்மையிலேயே பாலோ, வெண்ணிறத் தண்ணீரோ அம்மன் தலையில் இடைவிடாமல் விழுந்துகொண்டிருந்தது.



அம்மன் காலடியில் முருகன் சிலை ஒன்று. அம்மனுக்கு இரு புறமும் பாவை விளக்குகள். பக்கவாட்டில் படமெடுத்த பாம்பு.



அம்மனுக்கு வெகு அருகில் அந்தச் சிலைக்கு நிதியளித்தவரின் / ஏற்பாடு செய்தவரின் பெயரும் படமும் ஒரு சிறிய பலகையில் பளிச்சென வைத்திருந்தார்கள். விசாரித்ததில் அவர், அந்த வட்டாரத்தில் முன்பு மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தவராம்.



அரசியல்வாதிகளின் திருப்பணிகள், உள்நோக்கம் கொண்டவை. நீண்ட காலமாகவே அப்படித்தான் நடந்து வந்துள்ளது. மக்களின் செல்வாக்கை மீண்டும் பெற, பக்தியைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். 'படவட்டம்மன் அருள்பெற்ற' என்ற அடைமொழியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அவர் நின்றாலும் நிற்கலாம்.

1 comment:

இராம.கி said...

என்ன நண்பரே?

நீங்களும் டெர்ரா கோட்டா என்று எழுத வேண்டும்? சுடுமண் மொம்மை, அல்லது சிலை அல்லது திருமேனி என்று எழுதலாமே? "சுடுமண் சிலையாய்ப் படைவீட்டம்மன்" என்று எழுதலாமே? ஒவ்வொரு சொல்லாய் இப்படித் தமிழில் நாம் இழக்க வேண்டுமா? நீங்கள் என்றில்லை, பலரும் சுடுமண் என்று எழுதுவதைத் தவிர்ப்பதைத் தாளிகைத் துறையில் கவனிக்கிறேன்.

1722, from It. terra cotta, lit. "cooked earth," from terra "earth" (see terrain) + cotta "baked," from L. cocta, fem. pp. of coquere (see cook). As a color name for brownish-red,
attested from 1882.

அன்புடன்,
இராம.கி.