கானல் காட்டுக்குப் போய்விட்டு, பட்டிவீரன்பட்டி வழியாக 7.10.2007 அன்று மதுரை ரெயில் நிலையம் வந்தேன். அங்கு ரெயில் வருவதற்கு 2 மணி நேரம் இருந்தது. சரி, மதுரையை ஒரு சிறு வலம் வருவோம் எனக் கிளம்பினேன். வழியில் சில நல்லவற்றைக் கண்டேன்.
மதுரையின் தெருக்களில் நல்ல வழிகாட்டிப் பலகைகளைக் கண்டேன். ஒவ்வொரு தெருவின் அமைப்பு, மதுரை மாநகராட்சியின் முக்கிய தொலைபேசி எண்கள், கவுன்சிலரின் பெயர் - தொடர்பு எண்கள் ஆகியவற்றோடு அந்தப் பலகையை வைக்க உதவிய விளம்பரதாரரின் விவரத்துடன் அந்தப் பலகைகள் விளங்கின. தெருப் பெயர்கள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையும் தமிழாக்கினால் மிக நல்லது. இதே போல் தமிழ்நாட்டின் எல்லாத் தெருக்களுக்கும் வைக்கலாம்.
சென்னையிலும் இன்னும் சில பெரிய நகரங்களிலும் இத்தகைய பலகைகள் இருக்கின்றன ஆயினும் அவை மிகக் குறைவே. மேலும் பல இடங்களில் தன்னார்வலர்களின் முயற்சியினால்தான் இத்தகைய பலகைகள் நிற்கின்றன்; நகர நிர்வாகம், விளம்பரதாரர்களை உரிய வகையில் பயன்படுத்தினால் இதை வீச்சுடன் பயன்படுத்தலாம். இதையே எணினி (டிஜிட்டல்) வடிவில் வைத்து, கணினி வழி நிருவகித்தால் நீண்ட காலப் பயன் கிட்டும்.
பலகைகள், இரவில் ஒளிரும்வண்ணம் செய்யலாம். அதற்குத் தேவையான மின்சாரத்தைச் சூரிய ஒளியின் மூலம் தனக்குத் தானே அந்தப் பலகை பெறுமாறு செய்தால் மிக நன்று. அப்போது ஒரே பலகையில் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் விவரங்களைப் பெற முடியும்.
அதே போன்று, தெருவோரம் வாகன நிறுத்துமிடத்தின் எல்லையை, சென்னை உள்பட பல பகுதிகளிலும் வண்ணத்தினால் (பெயின்ட்) வரைந்து வைத்துள்ளனர். அவை எளிதில் அழிந்தும் தேய்ந்தும் போய்விடுவதைக் காண்கிறோம். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக, மதுரை மாநகராட்சியினர், இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் எல்லைக் கோட்டின் ஆயுள் பல மடங்கு கூடுகிறது. இதையும் இதர பகுதிகளில் பின்பற்றலாம்.
Sunday, December 23, 2007
Saturday, December 22, 2007
சொக்கப் பனை எரிகிறது
17.11.2007 அன்று, கார்த்திகை முதல் தேதி. நாகை மாவட்டத்தில் கடலோரம் அமைந்துள்ள பெருந்தோட்டம் பஞ்சாயத்தில் நாயக்கர்குப்பம் அருகில் இருந்தேன். இரவு 7 மணி இருக்கும். நல்ல குளிர்க் காற்று. என் உடல் சிறிது வெடவெடத்தது. நாசியில் நீர் சுரந்தது. என் உடன் வந்த நண்பர், தலைக்கு மப்ளர் கட்டிக்கொண்டார். அப்போது, தற்செயலாக அங்கு சாலையோரமாகச் சொக்கப் பனை கொளுத்தும் காட்சியைக் கண்டேன்.
சொக்கப் பனை என்பது, வீதியில் ஓலைகள், சுள்ளிகள்.... போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு கோபுரம் போல் அமைத்து, ஊர் மக்கள் கூடியிருக்க, கொளுத்தும் ஒரு நிகழ்வாகும். குளிருக்கு இதமாக இருப்பதோடு, பழைய பொருட்களை இதில் எறிந்து எரிப்பதும் உண்டு. அந்த வகையில் போகியோடு ஒப்பிடக்கூடிய ஒரு நிகழ்வு, இது.
விறுவிறுவெனப் பற்றிய தீ, கொழுந்து விட்டு எரிந்து சற்று நேரத்தில் அணைந்தது. தீ ஏற ஏற, சூடும் வெளிச்சமும் ஒரே நேரத்தில் ஏறின. தீப்பொறிகள் காற்றில் விசிறிப் பறந்தன. மக்கள் சற்றே விலகி நின்று அதை அனுபவித்தார்கள்.
இந்த அழகை நிலாவும் வேடிக்கை பார்த்தது.
Sunday, September 23, 2007
அன்னை தெரேசா இல்லத்தில் நான்
26.4.2007 அன்று கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசாவின் இல்லத்திற்குச் சென்றேன். அவரது இல்ல வாயிலில் உள்ள பலகையில் 'அவர் உள்ளே இருக்கிறார்' என்பதைக் குறிக்கும் 'IN' என்ற சொல்லைக் கண்டேன். மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றேன்.
இல்லச் சகோதரிகள் அன்புடன் வரவேற்றனர்.
அன்னையின் கல்லறையைக் கண்டு வணங்கினேன். அணையா விளக்குடனும் அழகிய மலர்களுடனும் குளிர்ச்சியான பளிங்குப் பேழையில் அவர் துயில் கொண்டிருந்தார்.
அன்னையின் திருவுருவச் சிலை, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்தது.
விடை பெறும்போது அன்னை தெரேசாவைப் பற்றிய சில அறிமுக ஏடுகளைக் கையளித்தனர்; கூடவே ஒரு டாலரையும் அன்பளிப்பாய் வழங்கினர்.
என்னால் இயன்ற தொகையை நன்கொடையாய்க் கொடுத்தேன்.
மேலே கல்லறை அருகே நான் இருக்கும் படங்களை என் அப்பா குப்புசாமி எடுத்தார். அன்னையின் சிலையருகே நான் இருக்கும் படத்தை என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார். வாயிற்பலகைப் படத்தையும் என் அம்மா படத்தையும் கல்லறைப் படத்தையும் நான் எடுத்தேன்.
மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டீஸ் என்ற அமைப்பின் இப்போதைய தலைமைச் சேவகர் சகோதரி நிர்மலாவைச் சந்திக்க முயன்றேன்; ஆயினும் நேரப் பற்றாக்குறை காரணமாக உடனே கிளம்பும்படி ஆயிற்று.
இல்லச் சகோதரிகள் அன்புடன் வரவேற்றனர்.
அன்னையின் கல்லறையைக் கண்டு வணங்கினேன். அணையா விளக்குடனும் அழகிய மலர்களுடனும் குளிர்ச்சியான பளிங்குப் பேழையில் அவர் துயில் கொண்டிருந்தார்.
அன்னையின் திருவுருவச் சிலை, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்தது.
விடை பெறும்போது அன்னை தெரேசாவைப் பற்றிய சில அறிமுக ஏடுகளைக் கையளித்தனர்; கூடவே ஒரு டாலரையும் அன்பளிப்பாய் வழங்கினர்.
என்னால் இயன்ற தொகையை நன்கொடையாய்க் கொடுத்தேன்.
மேலே கல்லறை அருகே நான் இருக்கும் படங்களை என் அப்பா குப்புசாமி எடுத்தார். அன்னையின் சிலையருகே நான் இருக்கும் படத்தை என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார். வாயிற்பலகைப் படத்தையும் என் அம்மா படத்தையும் கல்லறைப் படத்தையும் நான் எடுத்தேன்.
மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டீஸ் என்ற அமைப்பின் இப்போதைய தலைமைச் சேவகர் சகோதரி நிர்மலாவைச் சந்திக்க முயன்றேன்; ஆயினும் நேரப் பற்றாக்குறை காரணமாக உடனே கிளம்பும்படி ஆயிற்று.
Sunday, September 16, 2007
வயிற்றுக்காகக் கயிற்று மேலே
துரித உணவகம் போல், அரை மணி நேரத்தில் ஒரு கழைக் கூத்தைக் கண்டதுண்டா? செப்.2 அன்று திருவல்லிக்கேணியில் சாலை ஓரத்தில் நான் கண்டேன்.
பாரதியார் இல்லம் இருந்த துளசிங்க பெருமாள் கோயில் தெருவின் முனையில், சந்தடி நிறைந்த இடத்தில் 3 பேர் வந்து இறங்கினார்கள். இரண்டு மூங்கில் கழிகளை நிறுத்தி, விறுவிறுவெனக் கட்டினார்கள். கயிற்றின் இறுக்கத்தையும் உறுதியையும் சோதித்தார்கள்.
இன்னொருவர், சில்லறைகளை ஈர்ப்பதற்காக ஒரு விளம்பரச் சுருள் துண்டை விரித்தார். தன் வாத்தியத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.
9 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, கம்பத்தின் மேல் ஏறினாள். ஒரு நீண்ட கழையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டாள். கயிற்றில் கால் வைத்துத் தன்வயப்படுத்திய பிறகு கழையைப் பிடித்தபடி நடந்தாள்.
முதலில் வெறுங்காலில் நடந்தாள்; பிறகு அலுமினிய தட்டு ஒன்றில் கால்களை வைத்து நடந்தாள்; ஒரு சக்கரத்தில் கால்களை வைத்து நடந்தாள்; தலையில் ஒரு கும்பத்தை வைத்து நடந்தாள்.
நடுக் கயிற்றில் ஒற்றைக் காலில் நின்றாள். பல முறைகள், நடுக் கயிற்றில் நின்றபடி இப்படியும் அப்படியுமாக வேகமாக ஊஞ்சல் ஆடினாள்.
வாத்திய இசை, அவள் நடையின் வேகத்தைச் சீராகக் கூட்டிக்கொண்டிருந்தது. தன் வித்தைகளை எல்லாம் காட்டி முடித்த பிறகு, அவள் இறங்கினாள்; ஒரு தட்டினை எடுத்துக்கொண்டாள்; சுற்றி நின்றவர்களிடம் சன்மானம் கேட்டு வந்தாள்.
அவள் கூட வந்த இருவரும் கட்டப்பட்டிருந்த கம்பத்தை விடுவித்தார்கள். இந்த மொத்த கழைக் கூத்தும் அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் நான் கண்ட இரண்டு விடயங்கள்:
1. வழக்கமாக வித்தை காட்டும் போது, சுற்றி நிற்பவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவது உண்டு. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் கூட கைதட்டவில்லை; அந்தச் சிறுமியின் கூட வந்தவர்களும் வாத்தியம் இசைத்தார்களே தவிர கைதட்டவில்லை; சுற்றி நிற்பவர்களைக் கைதட்டுமாறு கேட்டுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு வேளை மொழி தெரியாமல் இருக்கலாம்.
2. தொடக்கம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் அந்தச் சிறுமியின் முகத்தில் சிறு புன்னகை கூட இல்லை. இறுகிய முகத்துடன், கடமையைச் செய்கிறேன்; பார்த்தால் பாருங்கள் என்பதான தோரணை இருந்தது. அந்த வயதில் அந்த உறுதியும் அழுத்தமும் கழைக் கூத்தைக் காட்டிலும் வியப்பளித்தது.
Tuesday, September 04, 2007
அம்பத்தூர் மாணவர் நிகழ்ச்சியில் நான்
மனிதநேயம் என்ற அறச் சிந்தனையுள்ள அறக்கட்டளை, 26.08.2007 அன்று அம்பத்தூர் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 196ஆவது மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.
அந்த நிகழ்வுக்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது.
இதே அமைப்பு, முன்பு அம்பத்தூர் தமிழ் இலக்கியப் பேரவை என்ற பெயரில் இயங்கி வந்தது.
இந்த அமைப்பின் சார்பாக, உதவும் உள்ளங்கள் என்ற மாத இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது.
இந்த அமைப்பின் நிறுவனர் ஆடானை சுகுமாரின் அழைப்பை ஏற்று, நிகழ்வில் பங்கேற்றேன்.
ஒன்றாம் வகுப்பு முதல், 10ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ - மாணவியர், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனம், நாடகம், கீபோர்டு வாசிப்பு உள்ளிட்ட பல வழிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நான், பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருந்து, பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
வளரும் இந்தியா, மண்ணில் வளரட்டும் மனிதநேயம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடந்தது.
பாலசுந்தரபாபு, வளையாபதி ஆகியோர், இசைப் போட்டிக்கு நடுவராக இருந்து, பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.எஸ். கம்ப்யூட்டர் காலேஜ் என்ற நிறுவனம், நிதியுதவி அளித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஞா.செல்வகுமார் எடுத்த சில புகைப்படங்களை இங்கே காணுங்கள்.
பி.எஸ்.எஸ். கம்ப்யூட்டர் காலேஜ் சார்பாகக் கலந்துகொண்ட அதன் மேலாளருக்கு நினைவுப் பரிசு
இந்த நிகழ்வில் பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருந்து, உரியவர்களைத் தேர்ந்தெடுத்து, பரிசு வழங்கியதோடு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூடியிருந்த அவையில் சிறிது நேரம் உரையாற்றினேன்.
என் சிறுவர் பாடல்கள் சிலவற்றையும் வழங்கினேன்.
இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஒருசேர உணர முடிந்தது; அவர்களின் கலை வெளிப்பாடுகளைப் பார்த்து மகிழ முடிந்தது. மனத்திற்கு மிகுந்த நிறைவு அளிப்பதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
Subscribe to:
Posts (Atom)