சீர்காழிக்கு அருகில் உள்ள புதுத்துறை மண்டபம் என்ற ஊரில் 1947ஆம் ஆண்டு கல்யாணம் - வஞ்சுளவல்லி ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்த என் அம்மா, 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றவர். நல்ல குரல் வளம் உள்ளவர்.
20 வயதில் என் அப்பா குப்புசாமியை மணந்த அவர், 4 பிள்ளைகள் பெற்று, ஆளாக்கி உள்ளார். வாழ்க்கையின் கடும் சோதனைகளின் போதும் துணிச்சலுடன் போராடி, எமக்கு வலுவூட்டிய எம் அன்னைக்கு 24.6.2006 அன்று 60 வயது தொடங்கியது.
அதைச் சிறு அளவில் கொண்டாட விழைந்தோம்.
என் அம்மாவின் ஒப்புதலின் படியும் விருப்பத்தின் படியும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றோம். அங்கிருந்த சுமார் 80 மாணவர்களுக்கு மதிய உணவளித்தோம்.

கிறித்தவ சமூகத்தினரால் நடத்தப்படுகிற அந்த இல்லத்து மாணவர்கள், இறை வணக்கம் பாடி, பிறகு உணவருந்தினார்கள்.

அம்மாவும் அக்கா வேதவல்லியும் உறவினர் ஆண்டாளும் நானும் மாணவர்களுக்குப் பரிமாறினோம்.

மாணவர் எவரும் கொஞ்சம்கூட வீணடிக்காமல் சாப்பிட்டார்கள் என்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.






பிறகு அவர்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
சிறிய அளவில் திட்டமிட்டதால் மிகச் சிலரையே அழைத்திருந்தோம். என் இளைய அக்காள் வேதவல்லி பாலாஜியின் வீட்டில் சிறு நிகழ்ச்சியும் வைத்திருந்தோம். மாடியில் வண்ணத் துணிப் பந்தல் (ஷாமியானா) கட்டி, விருந்தினர்களுக்கு விருந்தளித்தோம்.
எம் அழைப்பை ஏற்று, என் நண்பர்கள் காந்தளகம் உரிமையாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், நட்டுவாங்க வித்தகர் சசிரேகா, அவரின் பெற்றோர், ஓவியர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கார்த்திகேயன், கன்னட சிஃபி ஆசிரியர் தயானந்த் பட், காயத்ரி, உறவினர்கள் சேஷகோவிந்தராஜன் - மீரா, கோகுல் - பத்மஜா, பிரசன்னா - ரம்யா, குழந்தைகள் காயத்ரி, பிரீதி, ஸ்ருதி, கஜா, அபிநயா, அரவிந்த் உள்ளிட்ட பலரும் மேலும் அக்கம் பக்கத்திலிருந்து சிலரும் நேரில் வந்து சிறப்பித்தார்கள்.
சசிரேகா இனிய பாடல் ஒன்று பாடினார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, நண்பர் கன்னிக்கோயில் ராஜா, குறுஞ்செய்தி மூலம் என் சார்பில் பலரையும் அழைத்திருந்தார். நேரில் வர முடியாத பலரும் குறுஞ்செய்தி மூலமும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அம்மாவுக்கு நீரிழிவு இருந்தாலும் பேரக் குழந்தைகளின் விருப்பத்திற்காக கேக் ஒன்று வாங்கி வந்தோம். அதை அம்மா வெட்டினார்கள்.
வழக்கமாக எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த நாள் கொண்டாடுவது உண்டு. ஆனால், பெரியவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறோம். அதை ஒரு விழாவாக எடுப்பதில்லை. அந்த வகையில் இந்த 60 ஆண்டுகளில் இதுதான் எங்கள் அம்மா கொண்டாடிய முதல் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவுக்கு அடுத்த நாள் (25.6.2006), அம்மாவை அழைத்து ஏதாவது அனுபவங்களைப் பேசுமாறும் பாடுமாறும் கேட்டேன். முதலில் சுய அறிமுகம் செய்துகொண்டு, பிறகு பாடச் சொன்னேன். அவர், ஒரு சுலோகம் பாடினார். ஆயினும் பாதியிலேயே அந்தப் பதிவு நின்றுவிட்டது. தற்சமயம் கைவசம் இருப்பது, இரு நிமிடத்திற்கும் குறைவான ஒலிப்பதிவுதான்.
அதை இந்தத் தளத்தில் இட்டு வைத்துள்ளேன். பதிவிறக்கிக் கேட்டுப் பாருங்கள்.

