Sunday, July 30, 2006

எனது குருதிக் கொடை

13.7.2006 அன்று மதியம் என் வாழ்வில் முதல் முறையாக குருதிக் கொடை அளித்தேன். ஜீவன் குருதி வங்கியினரின் நடமாடும் குருதி வங்கி, சென்னை டைடல் பூங்காவிற்கு வந்தது. இது குறித்த தகவல், எங்கள் (சிஃபி ஊழியர்கள்) அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் வந்தது. மதிய உணவை முடித்துக்கொண்டு, அந்தச் சிற்றுந்து நிறுத்தியிருந்த இடத்திற்கு நானும் நண்பர் ஜனார்த்தனும் சென்றோம்.

Photobucket - Video and Image Hosting

இதற்கு முன் குருதிக் கொடை அளித்ததுண்டா? எப்போது? ஏதேனும் நோய்கள், ஒவ்வாமைகள் உண்டா? அண்மையில் அறுவை சிகிச்சை ஏதும் செய்துகொண்டீர்களா? மதிய உணவு சாப்பிட்டாயிற்றா? இந்தக் குருதிக் கொடைக்காகச் சன்மானம் எதுவும் கிடையாது என்பதை அறிவீர்களா? உங்கள் குருதியில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிந்தால் உங்களுக்குத் தெரிவிக்கலாமா?..... எனப் பல விவரங்களைக் கேட்கும் விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்த பிறகு, முன்பரிசோதனை செய்துவிட்டு (பிஎச் மதிப்பு கண்டறிதல்) எனக்கு முதலில் ரத்தம் எடுத்தார்கள்.

என் குருதி வகை: ஓ பாசிட்டிவ். 350 மில்லி குருதி எடுத்ததாகச் சொன்னார்கள். அன்றைய தினத்தில் முதன்முதலில் குருதி எடுத்தது, என்னிடமிருந்துதான். குருதி எடுத்த பிறகு, குடிக்க ஒரு பானம் அளித்தார்கள்.

Photobucket - Video and Image Hosting

என் செல்பேசியைக் கொடுத்து, குருதி எடுப்பதைப் படம் பிடிக்கச் சொன்னேன். அருகில் இருந்த மருத்துவர், "படம் எடுப்பது மிகவும் நல்லது. அது, பார்ப்பவர்களை ரத்தம் கொடுக்கத் தூண்டும்" என்றார். எங்கள் அருகில் தானும் வந்து நின்றார்.

Photobucket - Video and Image Hosting

எனக்குப் பிறகு நண்பர் ஜனார்த்தனுக்கும் குருதி எடுத்தார்கள். அவர் ஏற்கெனவே பல முறைகள் குருதிக் கொடை அளித்திருக்கிறார்.

நாங்கள் கிளம்பும்போது, குருதிக் கொடை அளித்ததற்காக ஒரு சான்றிதழை அளித்தார்கள். அதன் பின்புறம் இரத்த தானம் செய்த பிறகு.... செய்யவேண்டியவை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருந்தார்கள். அதை இங்கு தருவது பயனுள்ளதாய் இருக்கும்.

இரத்த தானம் செய்த பிறகு....

* அடுத்த உணவு சத்துள்ளதாக இருக்கட்டும்.

* சாதாரண நாட்களை விட அதிக நீர் / நீர் ஆகாரம் உட்கொள்ளவும்.

* பிளாஸ்திரியை 4 முதல் 6 மணி நேரம் வரை வைத்திருக்கவும்.

* 24 மணி நேரத்திற்கு அதிக பளு தூக்குவதையோ, உடற்பயிற்சி செய்வதையோ தவிர்க்கவும்.
மயக்கம் வருவது போல் அல்லது தலை சுற்றுவதுபோல் இருந்தால், உடனடியாகத் தரையில் படுக்கவும். அல்லது உட்கார்ந்துகொண்டு தலையைக் கால் முட்டிகளுக்கு நடுவில் வைத்துக்கொண்டு ஓய்வு எடுக்கவும்.

* தங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் இரத்த வங்கி மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
ஒரு மணி நேரத்திற்குப் புகை பிடிப்பதைத் தவிர்க்கவும்.

* 24 மணி நேரத்திற்கு மது அருந்துவதைத் தவிர்க்கவும்.

* 90 நாட்களுக்குப் பிறகு நீங்கள் மறுமுறை இரத்த தானம் செய்யலாம். தாங்கள் இரத்த வங்கியில் தானம் செய்தாலும் இரத்த முகாமில் தானம் செய்தாலும் இரத்தம் பெறும் முறை ஒரே மாதிரிதான் இருக்கும். தயவுசெய்து தங்களைத் தொடர்புகொள்ளும் வரை காத்திருக்காமல் தாங்களே முன்வந்து தானம் செய்யுங்கள்.


ஜீவன் குருதி வங்கி & ஆய்வு மையம்,
(ஐஎஸ்ஓ 9001 : 2000 சான்று பெற்ற அமைப்பு)
7, ரட்லண்டு கேட், 5ஆம் தெரு, நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 006.
தொலைபேசி: 52010022 / 28330300
மின்னஞ்சல்: safeblood@jeevan.org
வலை: www.jeevan.org

5 comments:

Simulation said...

இரத்த தானம் பற்றிய எனது கட்டுரை.

http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_21.html

-சிமுலேஷன்

உங்கள் நண்பன்(சரா) said...

ரத்த தானத்தை பற்றிய ஒரு நல்ல பதிவு, ரத்த தானம் செய்யலாம் என எண்ணி இருக்கும் என் போன்றவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய நல்ல பல குறிப்புக்கள்...

வாழ்த்துக்கள்,

"வேர்டு வெரிஃபிகேசனை தூக்கவும்"

அன்புடன்...
சரவணன்.

மகேஸ் said...

நல்ல உபயோகமான பதிவு.
என் கல்லூரி நாட்களில் இருந்து இரத்த தானம் செய்து வருக்க்றேன். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் செய்கிறேன்.
90 நாட்களுக்கு ஒருமுறை ரத்த தான்ம் செய்யலாம் என்கின்றனர். ஆனாலும் உடல் நலனக் கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்கிறேன். என் ரத்த வகை o+ve ரத்தம் வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

பாவூரான் said...

குருதிக் கொடை என்ற சொற்பிரயோகம் நன்றாக உள்ளது. தானத்திற்கும் கொடைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

சீமாச்சு.. said...

பாராட்டுக்கள் அண்ணா கண்ணன். இது போல இன்னும் பல முறை தந்து பல உயிர்களைக் காக்க வாழ்த்துகள்.

நான் இது வரை அமெரிக்காவில் 8 முறை குருதிக்கொடை அளித்துள்ளேன்.

இந்த பதிவுக்கு நன்றி.

அன்புடன்,
சீமாச்சு