Thursday, September 14, 2006

தெருவில் சிதறிய அரிசி

இரு மாதங்களுக்கு முன் அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, இதைக் கண்டேன். தெருவின் நடுப்பகுதியில் ஒரு கோடு போல் அரிசி நீண்டிருந்தது. ஒருவர், அந்த அரிசியைத் திரட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு மிதிவண்டி. அந்த மிதிவண்டியின் பின்னால் ஒரு பெரிய பை.

என்ன நடந்திருக்கிறது என்று உடனே புரிந்துவிட்டது.

நியாய விலைக் கடையிலோ, மளிகைக் கடையிலோ 15, 20 கிலோ அரிசி வாங்கி அதைத் தன் மிதிவண்டியின் பின்புறத்தில் வைத்துக்கொண்டு இவர் வந்திருக்கிறார். அரிசிப் பையில் சிறு ஓட்டை இருந்திருக்கிறது. அதை இவர் கவனிக்கவில்லை. மிதிவண்டியை மிதித்துக்கொண்டு தெருவில் போயிருக்கிறார். அந்த ஓட்டையிலிருந்து அரிசி கீழே ஒரே சீராகக் கொட்டத் தொடங்கியிருக்கிறது. அதைத் தெருவில் யாரோ பார்த்து இவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் இவர், கொஞ்ச தூரம் வந்துவிட்டார்.

உடனே வண்டியை நிறுத்தி, ஓட்டையை அடைத்திருக்கிறார். இப்போது நின்று திரும்பிப் பார்த்தால் தெரு முழுக்க நடுவில் கோடு போட்டது போல் அரிசி. அதை அப்படியே விட்டுவிட்டு வர மனம் இடம் கொடுக்கவில்லை. பக்கத்தில் யாரிடமோ, விளக்குமாறு ஒன்று வாங்குகிறார். அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிக் குவிக்கிறார். அதைத் தான் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.





இரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில் எடுத்த படங்கள் என்பதால் மங்கலாகத் தெரிகிறது.

இதைப் படம் எடுக்கக் காரணம், ஏழைக்கு ஒவ்வொரு அரிசி மணியும் முக்கியம் என்பதை உணர்த்தத்தான்; சாப்பிடும்போது மிச்சம் மீதி வைத்துவிட்டு, எறிந்துவிட்டுச் செல்வோர், இதைப் பார்க்க வேண்டும். நாம் வீணடிக்கும் உணவு, வேறொருவரின் வயிற்றுக்குச் சொந்தமானது; பணத்தைக் கொடுத்து வாங்கியதாலேயே அதை வீணடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதை உணரவேண்டும்.

8 comments:

SathyaPriyan said...

அருமை. சிறந்த கருத்து.

VSK said...

Very touching!

சிறில் அலெக்ஸ் said...

நானும் இதுபோல பாத்துருக்கேன். நல்ல பதிவு. நல்ல சிந்தனை.

துளசி கோபால் said...

கொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு தமிழ்ப்படத்துலே இப்படி ஒரு சீன்.

அரிசி வாங்கிக்கிட்டு வர்ற ஹீரோ, காதலி வீட்டுக்கு முன்னாலே (அவ மாடியிலே இருந்து
பாக்கணுமாம்) ஐ லவ் யூ ன்னு அரிசியாலே எழுதி வச்சிருப்பார்.

எங்கே போய் முட்டிக்கிறது?

வடுவூர் குமார் said...

மேல சோகமாக பார்த்துட்டு, கீழே துளசி போட்டிருந்த பின்னூட்டம் பார்த்தப்ப
ஒரே :-))
;-))

முனைவர் அண்ணாகண்ணன் said...

ஆமாம் துளசி. நீங்கள் சொல்லும் காட்சி, 'பாய்ஸ்' படத்தில் இடம்பெற்றதுதானே! தவறான, பொறுப்பற்ற காட்சி.

செல்வநாயகி said...

நல்ல பதிவு.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மிக நல்ல மற்றும் தேவையான பதிவு நாம் வேஸ்ட் செய்யும் ஒவ்வொரு மணி அரிசியும் எங்கோ யாருக்கோ பசியாற்ற உதவி இருக்கக் கூடும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து உணவை வேஸ்ட் செய்யும் பழக்கம் குறைய வேண்டும்.