Sunday, July 18, 2010

கோவை மாநாட்டில் அண்ணாகண்ணன்

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக, தமிழ் இணைய 9ஆவது மாநாடு நடைபெற்றது. அதில் தமிழில் செல்லிட ஆளுகை என்ற தலைப்பிலான என் ஆய்வுக் கட்டுரை தேர்வாகியிருந்தது. அது தவிர, கலந்துரையாடல், கேள்வி-பதில், வலைப்பதிவர் அமர்வு உள்ளிட்ட மேலும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்க அழைக்கப்பெற்றேன். இவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 21 அன்று இரவு கிளம்பி, ஜூன் 22 அன்று முற்பகலில் கோவை சென்றடைந்தேன்.

நானும் என் அம்மா சௌந்திரவல்லியும் வரும் தகவலை முன்பே பதிந்திருந்தேன். அதைத் தொடர்ந்து, கோவை தொடர் வண்டி நிலையத்தில் என் புகைப்படத்துடன் ஒருவர் காத்திருந்தார். எங்களைக் கண்டதும் வரவேற்று, வாகன சாரதியிடம் ஒப்படைத்தார். அவர், எங்களைக் குளிரூட்டிய மகிழுந்தில் அழைத்துச் சென்று எமக்கு ஒதுக்கப்பெற்ற சேவை அடுக்கத்தில் எங்களைச் சேர்ப்பித்தார்.

ஆனால், அந்த அடுக்கக வாயிலில் இருந்த அதிகாரிகள், இங்கே தங்குவோரின் பட்டியல் மூன்றாவது முறையாகத் திருத்தப்பெற்றுள்ளதாகவும் புதிய பட்டியலில் எங்கள் பெயர் இல்லையென்றும் கூறினார். என்னைப் போல் பலரும் அங்கே காத்திருந்தனர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தினைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். சில நிமிடங்களில் மீண்டும் அழைத்து, எங்கள் அறை அங்குதான் உள்ளது என அதிகாரிகளிடம் உறுதி செய்தனர். ஆயினும், புதிதாகக் கட்டிய அடுக்ககம் என்பதால், சில அறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு வருவதால் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டினர். அடுத்த அரை மணி நேரத்தில் அறையை அடைந்தோம்.

மிகச் சிறப்பான, குளிரூட்டிய, மூன்று படுக்கை வசதி கொண்ட அறைகள். இரண்டு அறைகளில் தொலைக்காட்சிகள். விசாலமான வரவேற்பறை. தரமான தண்ணீர். ஓய்வறைகளில் வெந்நீர் வசதி. உணவும் காஃபியும் அறைக்கே வந்து சேர்ந்தன. ஏதும் பழுது எனில் உடனே திருத்திக் கொடுத்தனர்.

இது தான் நாங்கள் தங்கிய மார்டின் சார்லஸ் ரெசிடென்சி அடுக்ககம்.

'வானமளந்த தனைத்து மளந்திடும் வன்மொழி வாழியவே' என்ற பாரதியார் வாக்குடன் எங்கள் அடுக்கக வாயிலில் எங்களை வாழ்த்தி வைக்கப்பெற்ற பதாகை:



செம்மொழி மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்ற இடத்தில் வைக்கப்பெற்ற இயற்கைத் தாவரங்களால் ஆன வரவேற்பு வளைவு



இணையத்தள கண்காட்சி அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தமிழ் விசைப்பலகையின் பேருருவம்.


தமிழ் விசைப்பலகையின் பேருருவத்திற்கு மேலே பெரிய திரையிட்டு, மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் காட்டினர். இடையிடையே செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.



செம்மொழி மாநாட்டு வளாகத்தில் சிற்சில இடங்களில் இத்தகைய வரைபடத்தினை அமைத்திருந்தார்கள். ஆனால், இதனை அச்சிட்டு, வந்திருந்த பேராளர்கள் அனைவரின் கைகளிலும் தந்திருந்தால் மிக உதவிகரமாக இருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் இந்தப் பலகைகளைத் தேடி வந்து பார்ப்பது என்பது  மிகக் கடினம்.



மாநாட்டில் ஆய்வரங்கம் நிகழ்ந்த பகுதியான கொடிசியா அரங்கின் வெளிவாயிலில் நானும் என் அம்மா சௌந்திரவல்லியும்.



25.06.2010 அன்று காலையில், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி அரங்கில் என் உரை தொடங்கும் முன் நானும் என் அம்மா சௌந்திரவல்லியும்.


முரசொலி மாறன் அரங்கின் வாயில் அருகில் வைக்கப்பெற்றிருந்த ஓவியத்தின் அருகில் நான்.



25.06.2010 அன்று காலையில், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி அரங்கில் என் உரை தொடங்குவது தொடர்பான அறிவிப்பு.



25.06.2010 அன்று காலையில், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி அரங்கில் 'கையடக்கப் பேசியில் தமிழ்' என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், 'தமிழில் செல்லிட ஆளுகை' என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள்.


எனது உரையின் விழியப் பதிவினை இங்கே காணலாம் -
http://annakannan.blogspot.com/2010/07/blog-post.html



அன்று மாலை இலங்கை யாழன் சண்முகலிங்கம் அரங்கில் 'கையடக்கக் கருவிகளில் தமிழ்' என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் பங்கேற்றேன். இதில் முத்து நெடுமாறன், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மொழிபெயர்ப்புப் பிரிவின் இயக்குநர் முனைவர் அருள் நடராசன், செல்வி ஸ்வர்ணலதா ஆகியோருடன் கலந்துரையாடினேன்.




26.06.2010 அன்று காலையில் முரசொலி மாறன் அரங்கில் 'தமிழ் மென்பொருள்கள் மற்றும் இணையப் பக்கங்கள் உருவாக்கியோருடன் கலந்துரையாடல்' என்ற தலைப்பில் 11 முதல் 11.50 வரை எனக்கு நேரம் ஒதுக்கப்பெற்றிருந்தது. இதில் பத்ரி சேஷாத்ரி தலைமை வகித்து, தமிழ் இணையம் சார்ந்து கேள்விகளை எழுப்ப, நான் அவற்றுக்குப் பதில்  அளித்தேன். எனக்கு அடுத்து நா.கண்ணன், உரையாற்றினார் (தமிழ் - கொரியத் தொடர்புகள்).


இந்த நிகழ்வுக்கு அடுத்து, அன்று மாலையில் வலைப்பதிவர்க்கான அமர்வில் பங்கேற்றேன். வலைப்பதிவர் செய்யத்தக்கவை - தகாதவை என்ற தலைப்பில் பேசத் திட்டமி்ட்டிருந்தேன். ஆயினும் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த ஓசை செல்லாவின் குறிப்பிற்கிணங்க, அதனை வாழ்த்துரையாகவே வழங்கினேன்.



என் உரைகள், அது தொடர்பான விவாதங்கள், நண்பர்களுடான சந்திப்புகள், எடுத்துக்கொண்ட படங்கள், மாநாட்டில் என்னைக் கவர்ந்தவை, எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை உள்ளிட்ட பலவற்றையும் அடுத்தடுத்து எழுதுவேன். விழியப் பதிவுகள் கிட்டினும் இடுவேன்.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு அளித்த நல் உள்ளங்களுக்கு என் நன்றி.

=============================================

தொடர்புடைய இடுகைகள்:

பால ரமணி, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளம்பிறை ஆகியோருடன் நான்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post.html

முனைவர்.ப.அர.நக்கீரன் உடன் நான்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post_08.html
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் உடன் நான்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post_3567.html
ஒளவை நடராசன் & அருள் நடராசன் உடன்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post_13.html

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்

http://annakannan.blogspot.com/2010/07/blog-post_07.html

சிவா பிள்ளையுடன் சிறு உரையாடல்

http://annakannan-interviews.blogspot.com/2010/07/blog-post.html

தமிழில் செல்லிட ஆளுகை: அண்ணாகண்ணன் உரை - விழியப் பதிவு

http://annakannan.blogspot.com/2010/07/blog-post.html

4 comments:

துளசி கோபால் said...

தொலைக்காட்சியில் காட்டாத(?!) அனைத்து விவரங்களுக்கு நன்றி.

'தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்க்கு' என் அன்பும் விசாரிப்புகளும்.

இனிய பாராட்டுகள் உங்களுக்கு.

manjoorraja said...

அனைத்தும் அருமை.

தொடரவும்.

TK said...

"தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்"

Unknown said...

தங்களின் தொகுப்பை புகைப்படங்களுடன் தந்ததில் பெரிய மகிழ்ச்சி நேரில் சென்று பார்க்க இயலாமல் போன எங்களுக்கு இது ஒரு வரப்ரசாதம். மேலும் உங்களின் ஜாதகம் பற்றி (எதிர் காலம்) தெரிந்து கொள்ள உள்ள ஒரு நல்ல இணையத்தளம் www.yourastrology.co.in இதன் மூலம் நீங்கள் உங்கள் காதல்,கல்வி,வேலை,திருமணம்,எண்கணிதம் முதலியவைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.