Wednesday, August 24, 2005

மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன்



பத்தாண்டுகளுக்கும் மேல் எனக்கு இவரோடு தொடர்பு உண்டு. என் நண்பர் சந்திரஹாசன், இவர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரைச் சந்திக்கச் செல்லும்போது இவருடன் தொடர்பு ஏற்பட்டது. என் படைப்புகளையும் திறமையையும் மதித்தவர். பல நல்ல தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர்.

அவர் நடத்தி வரும் காந்தளகம் பதிப்பகத்தின் வரலாற்றை என்னைக் கொண்டு எழுதி வாங்கி, 'காந்தளகம் - 20 ஆண்டுகள்' என்ற தலைப்பில் நூலாக்கியவர். அதற்குப் பிறகு அவர் அம்மா தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்களுடன் உரையாடி, அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதித் தருமாறு கேட்டார். அதையும் 'தகத்தகாய தங்கம்மா' என்ற தலைப்பில் நூலாக்கினார். நாங்கள் இருவரும் இணைந்து வில்ஹெம் கெய்கரின் மகாவம்சம் தொடர்பான நூலின் நீண்ட முன்னுரையை, 'சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தோம்.

சச்சியின் அம்மா, மிகுந்த கனிவுடன் என்னுடன் பழகினார். இப்போது 84 வயதாகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த இந்தப் படத்தில் என் மீது மிகுந்த அன்புகொண்ட இருவர் இருக்கிறார்கள். மூன்றாமவர், அன்று தற்செயலாக சச்சியின் வீட்டுக்கு வந்தவர். பேராசிரியர் என்று நினைவு. பெயர் நினைவில்லை. புகைப்படம் எடுத்த அன்று, அங்கு மூன்று இருக்கைகள் இருந்தன. நான் இன்னோர் இருக்கையை எடுத்து வர நினைக்கையில், 'பரவாயில்லை. என் இருக்கையிலேயே நீங்களும் அமருங்கள்' என இடம் கொடுத்தார், சச்சி.

No comments: